Tuesday 24 July 2012

Peruvaazhvu Kaanbadhu eppodhu



பெருவாழ்வு காண்பது எப்போது?
                                             - சாரதா ராஜாமணி 

குடிசையோரம் புழுக்கள் ஓடும் சாக்கடை ஓடுது - தெருவில்
குழாய்த் தண்ணி அதனருகே சொகுசாய் கொட்டுது
கிழிஞ்ச சட்டைப் பையனங்கே எச்சில் துப்புறான்
கிழவியவள் தானுமங்கே குடிநீர் பிடிக்கிறாள்!

எருமைமாடு சாணம் போட சகதி நிறையுது - தெருவில்
சிறுவனவன் மலம் கழிக்க நோயும் பரவுது!
கண்ட இடத்தில் கொட்டுவதால் குப்பை நிறையுது
உண்ட இடத்தில் படுத்தபடி தெருநாய் உறங்குது!

பள்ளி செல்லா சிறுவனவன் கோலி ஆடுறான் - அங்கே
படிப்பு அறியாச் சிறுமி அவள் சுள்ளி பொறுக்குறாள்!
வாழ தெரியாத் தலைவனவன் குடியில் ஆடுறான்
வாழக்கைப்பட்ட குடிசைப்பொண்ணு அவனை சாடுறாள்!

கோலி ஆடும் சிறுவனவன் படிப்பதெப்போது?
ஜாலியாக திரியும் தலைவன் திருந்துவதெப்போது?
குடிசைவீடும் மாளிகையாய் மாறுவதெப்போது?
குடிமக்களும் பெருவாழ்வு காண்பதெப்போது?

Perumaidhanai Kaappom


பெருமைதனைக் காப்போம்
                                 -சாரதா ராஜாமணி 

இமயம்முதல் குமரிவரை இந்தியனாடு!
சமயக் குரவர் பலரறிந்த சத்தியநாடு!
இதயம் பேசும் இன்பங்களை ஈந்திடும் நாடு
உதய சூரியன் பொற்கிரணங்கள் உயர்த்திடும் நாடு!

அன்புக்கடலாம் அண்ணல் காந்தி பிறந்திருந்த நாடு!
அருட்கடலாம் அமரர் நேரு அவதரித்த நாடு!
உண்மை அன்பு சேவைகளின் உறைவிடம் நம் நாடு!
உயர்ந்த உள்ளச் சான்றோர்கள் உதித்திருந்த நாடு!

இயற்க்கை அன்னை இதயம் குளிர இயங்குகின்ற நாடு!
பயன்மிகுந்த கனிவளமும் பரவி கிடக்கும் நாடு!
மண் வளமும், மலை வளமும் மிகுந்திருக்கும் நாடு!
கண் விரிய வெளிநாட்டார் வியந்திருக்கும் நாடு!

நாட்டிலுள்ள மக்களெல்லாம் ஒன்று கூடுவோம்!
வீட்டில் உள்ள மழலைகளை சிறக்க வளர்ப்போம்!
தாயை நிகர்க் கல்விதனை தவறாமல் கற்போம்!
தாய்நாட்டின் பெருமைதனைத் தடையின்றிக் காப்போம்!

Monday 23 July 2012

Kavidhai Pirandhadhu

கவிதை பிறந்தது
                            -சாரதா ராஜாமணி  


கல கல வென்றே பாய்ந்தோடும்
கங்கை யமுனை காவேரி - போல்
பலப் பல மொழிகள் பேசுகின்ற
பலவித மதம் சேர் மாந்தரெல்லாம்
நிலவும் நமது பாரதம்
நீடதன் பெருமை உயர்த்திடுவோம்!

நதிகள் பலவே ஆனாலும்
நண்ணிக் கடலினை அடைதல் போல்
சாதி சமயங்கள் கிடக்கட்டும்
சண்டை வேண்டாம் நமக்குள்ளே!
பதிகள் பலவினும் வசிக்கின்ற
பாரத மக்கள் நாம் ஒருங்கிணைவோம் !

சீருடை அணியும் சிறுவர்களும்
சிறுபை சுமக்கும் சிறுமியரும்
காரிடை வலம்வரும் காளையரும்
கருத்தைக் கவரும் கன்னியரும் - இப்
பாரிடை பெற்றோர் துயருணர்ந்து
பயன்மிகு கல்வியை பயின்றிடுவோம்!

காணர்க்கரிய பாவையரைக்
கண்வைத்தவர் பின் சுற்றுவதும்
வீணர்க்குரிய புகைபிடிக்கும்
விலங்கினும் கீழாம் பழக்கமதும்,
மாணவர்க்கழகென எண்ணாமல்
மாதிரி மாணவநெனத் திகழ்வோம்!

பஞ்சசீலக் கொள்கைதனைப்
பஞ்சாய்க் காற்றில் பறக்கவிட்டுக் - கல்
நெஞ்சர்கள் நமதேல்லை உட்புகுந்தால்
நெஞ்சம் கனலென சீறிஎழ
வஞ்சகர் கொட்டம் அடக்கிடவே
வலிந்து சென்று உயிர்கொடுப்போம்!

தெய்வத்தின் பாதம் சரணடைவோம்;
தெருள் நீங்கத் தாய்நாடு காத்திடுவோம்,
தாய்மையை வணங்கி வாழ்த்திடுவோம்;
தன்னலம் கருதாமல் தழைத்திடுவோம் - என
வாய்மையின் வழியும் திறந்ததங்கே
வெல்ல ஓர் கவிதையும் பிறந்ததிங்கே!

(நான் காணும் ஓர் கனவினிலே
நைச்சியம் பேசும் நரிகளில்லை;
வானுயரப் புகழ்ந்து பாடும்
வஞ்சகப் புலிகளும் இல்லை; என
என் கனவு விரிந்தது அங்கே -
ஒரு கவிதை பிறந்தது இங்கே!)

                                                        - சாரதா ராஜாமணி